இந்தியா

ஓடும் பேருந்தில் குழந்தையை பிரசவித்து ஜன்னல் வழியே வீசியெறிந்த பெண் - அதிர்ச்சி சம்பவம்

பயணிகளில் ஒருவர் எதையோ வெளியே வீசுவதை ஓட்டுநர் கவனித்தார்.அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்து அதை ஜன்னல் வெளியே வீசி கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவின் பர்பானியில், 19 வயது ரித்திகா திர் என்ற பெண்ணையும் அவரது கணவர் என்று நம்பப்படும் அல்தாஃப் ஷேக் என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் பயணித்த பேருந்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பெர்த்கள் இருந்தன. பயணிகளில் ஒருவர் எதையோ வெளியே வீசுவதை ஓட்டுநர் கவனித்தார். கேட்டபோது, அல்தாஃப் தனது மனைவி பேருந்து பயணத்தால் சோர்வாக இருப்பதாகவும், வாந்தி எடுப்பதாகவும் கூறினார்.

இருப்பினும், இந்த சம்பவத்தை கவனித்த உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது, குழந்தை பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் கூற்றுப்படி, பயணத்தின் நடுவே பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தம்பதியினர் குழந்தையை ஒரு துணியில் சுற்றி வாகனத்திலிருந்து வெளியே எறிந்ததாக தெரிவித்தனர்.

குழந்தையை வளர்க்க முடியாததால் அதை கைவிட்டதாக தம்பதியினர் போலீசாரிடம் விசாரணையின்போது தெரிவித்தனர். அவர்கள் பர்பானியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக புனேவில் வசித்து வந்தனர் என்றும் தெரியவந்தது. அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.