இந்தியா

டெல்லியில் போராட்டம் நடத்திய இந்தியா கூட்டணி: சரத் பவார் பங்கேற்பு

சி.பி.ஐ. பதிவுசெய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிக்கப்பட்டது.டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி:

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகளில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி கெஜ்ரிவால் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து வருகிறார்.

அமலாக்கத்துறை பதிவுசெய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20-ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஜூலை 12-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. ஆனால், சி.பி.ஐ. பதிவுசெய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ. பதிவுசெய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் உத்தரவிட்டது.

சிறையில் உள்ள கெஜ்ரிவாலின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் திகார் சிறை நிர்வாகம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி அமைச்சருமான கோபாப் ராய், சரத்சந்திர தேசியவாத கட்சியின் தலைவரான சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.