புக்கரெஸ்ட்:
உக்ரைனில், ரஷியா முழு வீச்சில் தனது ராணுவ தாக்குதல்களை தொடங்கி உள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில் அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் திட்டத்திற்கு ஆபரேஷன் கங்கா என மத்திய அரசு பெயர் சூட்டியுள்ளது.
இந்தச் சூழலில் உக்ரைன் எல்லை வழியே ருமேனியா சென்ற மாணவர்கள் உள்பட 219 இந்தியர்களுடன் தலைநகர் புக்கரெஸ்ட்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் விமானம் நேற்று இரவு வெற்றிகரமாக மும்பையில் தரையிறங்கியது.
மேலும் மாணவர்கள் உள்பட 250 இந்தியர்களுடன் 2வது விமானம் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இருந்து நேற்றிரவு டெல்லி புறப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2வது ஏர் இந்தியா விமானம் அதிகாலை 2.45 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்திற்குள் சென்று மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை வரவேற்றார்.