மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்ட அந்த உணவுகளை மாணவர்கள் உண்ணும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, ஷியோபூர் மாவட்ட ஆட்சியர், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் சம்பவம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சத்துணவு பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.