இந்தியா

எஸ்.பி.ஐ ஏடிஎம் ரூ.1.93 கோடி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது குஜராத் உயர் நீதிமன்றம்!

இந்த முறைகேட்டை மறைப்பதற்காக வங்கியின் மைய வங்கியியல் அமைப்பில் போலி வைப்புத் தொகைப் பதிவுகளை அவர் உருவாக்கியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டம் ராஜ்பிப்லா எஸ்பிஐ கிளை ஏடிஎம் மற்றும் வங்கி மென்பொருளில் மோசடி செய்து ரூ.1.93 கோடியை சுருட்டிய வங்கி அதிகாரியின் இரண்டாவது ஜாமீன் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வங்கியில் நடந்த முறைகேடு

குஜராத் ராஜ்பிப்லா எஸ்பிஐ கிளையில் கேஷ் ஆஃபீசராக பணியாற்றிய பாங்மோய் சக்ரவர்த்தி, வங்கியின் பணக் பெட்டகத்திலிருந்து பணத்தை எடுத்து ஏடிஎம் மற்றும் ரொக்க வைப்பு இயந்திரங்களில் நிரப்பும் பொறுப்பில் இருந்தார். அவர் தனது நிர்வாக அதிகாரப்பூர்வ உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி, ஏடிஎம் அமைப்பில் குறைந்தபட்ச இருப்புத் தொகை காட்டுவது போல் மென்பொருளை மாற்றி அமைத்து, பெரும் தொகையை ரகசியமாகத் திருடி வந்துள்ளார். மேலும், இந்த முறைகேட்டை மறைப்பதற்காக வங்கியின் மைய வங்கியியல் அமைப்பில் போலி வைப்புத் தொகைப் பதிவுகளை அவர் உருவாக்கியுள்ளார்.

எந்தெந்த ஏடிஎம்களில் எவ்வளவு பணம் கைமாறியது?

விசாரணையில் அவர் நான்கு முக்கிய ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.1.93 கோடியைச் சுருட்டியது கண்டறியப்பட்டது, ராஜ்பிப்லா ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஏடிஎம்மில் ரூ.39.98 லட்சம், போய்ச்சாவில் உள்ள சுவாமிநாராயண் குருகுல் ஏடிஎம்மில் ரூ.39.92 லட்சம், ஏடிஎம் எண் 465624-ல் இருந்து ரூ.62 லட்சம், சந்தோஷ் சவுக்தி ஏடிஎம் எண் 465625-ல் இருந்து ரூ.51.64 லட்சம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது.

பணப்பரிமாற்றம்

சக்ரவர்த்தி திருடிய தொகையை உத்ரபிரதேசம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள தனது உறவினர்களின் வங்கிச் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். அங்கிருந்து UPI, RTGS மற்றும் NEFT மூலமாக ஐசிஐசிஐ வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பியுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் ரூ.2.34 கோடி மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் சந்தேகத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளன.

அக்டோபர் 17, 2025 அன்று அவர் நஸ்வாடி கிளைக்கு மாற்றப்பட்ட போதிலும், நவம்பர் 6 வரை அவரது கேஷ் ஆஃபீசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் செயல்பாட்டில் இருந்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் 28, 30 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் முறைகேடான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம்களில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது மொபைல் இருப்பிடத் தரவு ஆகியவை குற்றத்தை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்களாக அமைந்தன.

நீதிமன்றம் உத்தரவு

பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நவம்பர் 28, 2025 முதல் சிறையில் இருக்கும் பாங்மோய் சக்ரவர்த்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் கோரினார். ஆனால், நீதிபதி எச்.டி.சுதார் அடங்கிய அமர்வு, "பொருளாதாரக் குற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்படும் வெள்ளைச் சட்டைக் குற்றங்கள்" என்று சுட்டிக்காட்டியது. மின்னணு மற்றும் நிதி ஆதாரங்கள் இதில் அடங்கியிருப்பதால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது எனக் கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.