மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் பிரதமர் மோடியை அகோரி என்றும் முகலாய அரசர் அவுரங்கசீப் உடன் ஒப்பிட்டும் பேசியது சர்ச்சையாகி வருகிறது.
புனே நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சஞ்சய் ராவத்,
"இந்தியா மாபெரும் தலைவர்களை உலகிற்கு தந்துள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் குணாதிசயங்களை நாம் பார்க்கும்போது அது நமக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.
இந்திய அரசியல் வரலாற்றில் இது போன்ற ஒரு அகோரியை, இவ்வளவு இரக்கமற்ற ஒரு மனிதரை இதற்கு முன்பு யாரும் பார்த்ததில்லை.
இவர் எங்கிருந்து வந்தார்? முகலாய அரசர் அவுரங்கசீப் பிறந்த அதே மண்ணில் இருந்துதான் இவரும் வந்துள்ளார்.
அவுரங்கசீப் பிறந்தது குஜராத் மாநிலத்தில்தானே? அதே குஜராத் மண்ணில் இருந்துதான் மோடியும் வந்துள்ளார்" என்று பேசினார்.
சஞ்சய் ராவத்தின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்கள் பிரதீப் பண்டாரி மற்றும் ஷேஷாத் பூனவல்லா ஆகியோர் தில்லியில் உடனடியாக வீடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்:
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஷாத் பூனவல்லா,
"தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால், எதிர்க்கட்சிகளின் விரக்தி தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நாட்டின் பிரதமரையும், அவரது அரசியலமைப்பு பதவியையும் அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு, அவுரங்கசீப் பிறந்த மண் என்று ஒட்டுமொத்த குஜராத் மாநில மக்களையும் சஞ்சய் ராவத் அவமதித்துள்ளார்." என தெரிவித்துள்ளார்.