இந்தியா

முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ்

மேற்கு வங்கம் மற்றும் அதன் செழுமையான கலாச்சாரம், பாரம்பரியங்கள் மீதான தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.யான சயோனி கோஷ், நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை சந்தித்தார். அப்போது, ​​மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றுக்கான விஜய்யின் தொலைநோக்கு பார்வையை அவர் பாராட்டினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு, மேற்கு வங்கம் குறித்தும், அதன் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் மீதான தனது விருப்பம் குறித்தும் விஜய் அன்புடன் பேசியதாக கோஷ் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய்யைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது," என்று கோஷ் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

எக்ஸ் தள பதிவு:

இதுகுறித்த பதிவில், "தமிழ்நாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகள், நல்லாட்சி ஆகியவற்றில் வேரூன்றிய அதன் எதிர்காலம் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்துகொண்ட அதே வேளையில், மேற்கு வங்கம் மற்றும் அதன் செழுமையான கலாச்சாரம், பாரம்பரியங்கள் மீதான தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

அவரது அன்பான உபசரிப்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். தனது மாநிலத்திற்கான தொலைநோக்கு பார்வையை நனவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்," என்றும் அவர் மேலும் கூறினார்.

திரைத்துறை சார்ந்த எம்.பி.:

2021-இல் அரசியலில் நுழைந்த நடிகையும், பாடகியுமான கோஷ், ஜூன் 2026-இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து (TMC) மற்ற அதிருப்தி எம்.பி.க்களுடன் வெளியேறிய பிறகு, தற்போது 'நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா' (NCPI) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யாக உள்ளார்.

அதிருப்தி குழுவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவர் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கோஷ் பிப்ரவரி 2021-இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; அந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆசன்சோல் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். பா.ஜ.க. வேட்பாளர் அக்னிமித்ரா பாலிடம் அவர் தோல்வியடைந்தாலும், பின்னர் கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.

அபார வெற்றி:

2024 மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்ட கோஷ், 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஒரு காலத்தில் திரிணாமுல் தலைமைக்கு நெருக்கமான முக்கிய இளம் தலைவராகக் கருதப்பட்ட அவர், 2026 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் கட்சி அடைந்த படுதோல்விக்கு பிறகு அதிருப்தி அடைந்து விலகினார்.

2011 முதல் மேற்கு வங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வந்த திரிணாமுல் காங்கிரஸ், 294 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 80 இடங்களுக்கு சுருங்கியது. பா.ஜ.க. 207 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றதுடன், மாநிலத்தில் தனது முதல் அரசாங்கத்தையும் அமைத்தது.