இந்தியா

கர்நாடகத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி எடுத்து ரூ.6½ லட்சம் கொள்ளை

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க ஒரு வாடிக்கையாளர் சென்றுள்ளார். கொள்ளையர்கள் காரில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளது.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவகல்யாண் டவுனில் கர்நாடக வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க ஒரு வாடிக்கையாளர் சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு, அதில் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கியாஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி எடுத்து, ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து தெரியவந்தது.

மேலும் கொள்ளையர்கள் காரில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் மகாராஷ்டிரா விரைந்துள்ளனர்.