மகாராஷ்டிராவில் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற காவல் நாய்கள் இனி மூன்றாம் தரப்பினருக்கு தத்தெடுப்புக்காக வழங்கப்படாது என அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்தார்.
காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள், தங்கள் பணியை நிறைவு செய்த பிறகு பொதுவாக தத்தெடுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையான காவல் நாய்களுக்கு, தங்கள் பராமரிப்பாளர்களிடம் இருந்தும், வழக்கமான பழக்கவழக்கங்களில் இருந்தும் திடீரென பிரிவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, பல நாய்கள் மன அதிர்ச்சிக்கு உள்ளாகி, தங்களின் புதிய சூழல்களில் உணவை உண்பதற்கு மறுத்து வந்தன.
இந்த நிலையில், பணி ஓய்வு பெற்ற காவல் நாய்களின் நலன் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய அறிவிப்பை பிறப்பித்துள்ளார்.
அவர் அந்த அறிவிப்பில், மகாராஷ்டிர காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு நாய், தனது பணி ஓய்வுக்கு பிறகு துன்பப்படக்கூடாது. அத்தகைய விலங்குகள் நன்கு பராமரிக்கப்பட்டு, தங்கள் வாழ்நாளின் எஞ்சிய காலத்தை வசதியாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
பணி ஓய்வு பெற்ற நாய்கள், தங்களின் நீண்டகால பொறுப்பாளர்களுடன் காவல் துறையிலேயே தொடர்ந்து பணியாற்றும், அவர்களது வாழ்க்கை மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் என்றார்.
இதன்படி காவல் நாய்கள் 10 வருட சேவைக்கு பிறகு, செயல்பாட்டு பணிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறும், ஆனால் அவற்றின் எஞ்சிய ஆண்டுகளை கழிப்பதற்காக படையில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
பத்தாண்டு கால சேவையின் போது காவல் நாய்களுக்கும் அதன் பயிற்றுவிப்பாளருக்கும் இடையில் உருவான வலுவான பிணைப்பு தடையின்றி நீடிப்பதை இந்த கொள்கை உறுதி செய்கிறது.
ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை தேவைகள் உள்ளிட்ட ஓய்வுக்கு பிந்தைய அனைத்து செலவுகளுக்கும் மகாராஷ்டிர உள்துறை நேரடியாக நிதியளிக்க உள்ளது.
பணி ஓய்வு பெற்ற நாய்கள் முழுமையான அரசு ஆதரவுடனான வாழ்நாள் பராமரிப்புக்கு மாறுவதன் மூலம், அந்த நாய்கள் தங்கள் சேவையை நிறைவு செய்தபிறகு, அவற்றுக்கு தேவையான ஆறுதலும் பழக்கமான சூழலும் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.