இந்தியா

காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டை விற்பனை செய்த ரிலையன்ஸ்: ரூ.20,000 இழப்பீடு செலுத்த உத்தரவு..!

பிரச்சனை பொருளில் இல்லை, மாறாக ரிலையன்ஸ் காலாவதியான சரக்குகளை அகற்ற தவறியதில்தான் உள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் விற்பனை நிலையத்தில் இருந்து காலாவதியான நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அபராதம் விதித்தது.

இமாச்சல பிரதேசம் காங்ராவில் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் விற்பனை நிலையத்தில் இருந்து கொரியன் நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றை ஜூகல் கிஷோர் என்பவர் வாங்கினார்.

அந்த நபருக்கு அதற்கான ரசீது மற்றும் விலைப்படியலும் வழங்கப்பட்டது. பின்னர் அவருடைய மகள் அந்த நூடுல்ஸில் ஒரு பகுதியை சாப்பிட்ட போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த பாக்கெட்டை பரிசோதித்து பார்த்தபோது, அது 28 நவம்பர் 2025 அன்றே காலாவதியாகி, மூன்று மாதங்களுக்கு பிறகு அவருக்கு விற்கப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஜூகல் என்பவர் இழப்பீடு வழங்கும்படி காங்ரா மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தை அணுகினார். அப்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் வாதிட்டபோது, “பிராண்ட் முத்திரையிடப்பட்ட முன்-பேக்கேஜ் செய்யப்பட்ட பொருள் என்பதால், அதன் பாக்கெட்டில் காலாவதி தேதி தெளிவாக அச்சிடப்பட்டு இருந்தது.

பொருளை வாங்குவதற்கு முன்பு, அதனை சரிபார்ப்பது வாடிக்கையாளரின் பொறுப்பு. மேலும் பணம் செலுத்துவதற்கு முன்பு, பொருளை வாங்குபவர் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை படிக்குமாறு கடைக்குள் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

நூடுல்ஸூக்கும் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும் இடையேயான நேரடி தொடர்பை நிரூபிக்கும் வகையில், எந்தவித மருத்துவ ஆதாரமோ அல்லது ஆய்வக அறிக்கைகளோ சமர்ப்பிக்கப்படவில்லை.

அந்த பொருளே உணவு பாதுகாப்புத் துறை விதிமுறைகளின் கீழ் பிராண்ட் முத்திரையிடப்பட்டு ஒழுங்குபடுத்தி இருந்ததால், நூடுல்ஸ் உற்பத்தியாளைரையும் புகாரில் ஒரு தரப்பாக சேர்த்திருக்க வேண்டும்” என்று வாதிட்டது.

இந்நிலையில் இந்த புகார் ஹேமன்ஷூ மிஸ்ரா, நாராயணன் தாகூர் மற்றும் ஆர்த்தி சூட் ஆகியோர் அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது, “காலாவதியான உனவுப் பொருள் எதுவும் காட்சிபடுத்தவோ அல்லது விற்கப்படவோ இல்லை என்பதை உறுதி செய்வது ஒரு சில்லறை விற்பனையாளரின் மாற்ற முடியாத கடமையாகும்.

புகார்தாரர் தனது மகன் நூடுல்ஸ் சாப்பிட்ட பிறகு வாந்தி எடுத்ததாக கூறி ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்து இருந்தார். ஒரு சிறிய இழப்பீட்டு கோரிக்கைக்காக, ஒரு தந்தை தனது மைனர் குழந்தையின் நோய் குறித்து பொய்யான வாக்குமூலம் அளிக்க மாட்டார்.

பொருளின் உற்பத்தியாளர் FSSAI விதிமுறைகளுக்கு இணங்க, பாக்கெட்டில் காலாவதி தேதியை சரியாக அச்சிட்டிருந்தார். பிரச்சனை பொருளில் இல்லை, மாறாக ரிலையன்ஸ் காலாவதியான சரக்குகளை அகற்ற தவறியதில்தான் உள்ளது.

எனவே, பாதிக்கப்பட்டவர் அனுபவித்த மன வேதனை, பதட்டம் மற்றும் துன்புறுத்தலுக்காக ரூ.15,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5,000 இழப்பீடு தொகையை 30 நாட்களுக்குள் ரிலையன்ஸ் ரீடெய்ல் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.