ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள பொது சுகாதார பொறியியல் துறையில் மேற்பார்வை என்ஜினீயராக அசோக்குமார் ஜாங்கிட் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெய்ப்பூர், கோட்புட்லி, உதய்பூர், அஜ்மீர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அசோக்குமார் ஜாங்கிட்டின் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் அவரது பெயரில் உள்ள 19 சொத்துக்கள், அவரது மனைவி சுனிதா சர்மா பெயரில் 3 சொத்து மற்றும் மகன் நிகில் ஜாங்கிட் பெயரில் 32 சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தத்தில் அவர் ரூ.11½ கோடிக்கு மேல் சொத்துக்களை குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் அவரது சட்டப்பூர்வ வருமானத்தை விட சுமார் 161 சதவீதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.