இந்தியாவின் மூன்றாவது முப்படை தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இன்று (மே.31) பதவியேற்றுக்கொண்டார். ஜெனரல் அனில் சவுகானுக்கு நேற்றுடன் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இன்று பதவியேற்றார்.
பொறுப்பேற்றுக் கொண்ட பின் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். இந்திய ராணுவக் கட்டமைப்பில் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை மேம்படுத்துவதே தனது முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். முப்படைத் தலைமைத் தளபதியுடன் சேர்த்து, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் இவர் செயல்படுவார்.
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பல்வேறு முக்கியப் படைப்பிரிவுகளை வழிநடத்திய, சுமார் 40 ஆண்டுகால நீண்ட ராணுவ அனுபவம் கொண்ட ராஜா சுப்ரமணி, கடந்த ஆண்டு ஜூலை 31 அன்று ராணுவத் துணைத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.