தேர்தல் ஆணையம் முறைகேடு செய்து பாஜகவுக்கு உதவுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.
ஒரே வாக்காளர் பல இடங்களில் இருப்பது, பல மாநிலங்களில் ஒரே நபர் வாக்காளராக இருப்பது, போலி முகவரிகள், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், மங்கலான புகைப்படங்கள், மற்றும் படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்துவது போன்ற ஆறு முக்கிய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியது.
இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த இரண்டு தவிர வேறு வழியில்லை என்றும், ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் வரவில்லை என்றால், குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பீகாரில் 1,300 கி.மீ. தொலைவுக்கு 16 நாட்கள் வாக்காளர் உரிமை யாத்திரையை ராகுல் காந்தி இன்று தொடங்கினார்.