விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில், நேற்று மதியம் ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தின்போது 30-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்ததால் மீட்பு பணி தொடர்கிறது. இதனிடையே மீட்பு பணியின்போது மீண்டும் வெடிவெடித்தது.
இதில் தீயணைப்புத்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் சிலர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தைத் தொடர்ந்து தப்பி ஓடிய ஆலையின் உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தளப் பதிவில் அவர், "தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கண்டு நான் மிகுந்த வேதனை அடைகிறேன்.
தங்கள் குடும்பத்தினருக்காக வாழ்வாதாரம் ஈட்டும் நோக்கில் காலையில் வீட்டை விட்டுப் புறப்பட்டு சென்ற தொழிலாளர்களே இவர்கள். துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் துணை நிற்கின்றன; காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய நான் விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.