முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் கீழ் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மொஹ்சினா கித்வாய் (94) வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை 4 மணிக்கு காலமானார். அவரது உடல் இன்று பிற்பகல் 3 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மாலை 5 மணியளவில் நிஜாமுதீன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மொஹ்சினா கித்வாய் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹ்சினா கித்வாய் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
அவர் காங்கிரஸ் கட்சியின் மிகவும் மூத்த மற்றும் விசுவாசமான தலைவராக விளங்கினார். அவரது முழு வாழ்க்கையும் பொதுச் சேவைக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. தனது எளிமை, மென்மை மற்றும் கண்ணியமான அரசியல் வெற்றியின் மூலம், அவர் நாட்டில் பல தலைமுறைப் பெண்களுக்கு உத்வேகம் அளித்தார்.
இந்த துயர நேரத்தில், துயரத்தில் வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.