இந்தியா

சாவர்க்கர் பற்றி அவதூறு: வரும் 9ம் தேதி ராகுல் காந்தி ஆஜராக சம்மன்

சாவர்க்கர் பற்றி அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு புனே நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மாலை மலர்

மும்பை:

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த 2023ல் மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரை விமர்சித்தார். அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி தெரிவித்த கருத்து வரலாற்று உண்மைகள் அடிப்படையிலானது. அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான ராகுலின் வாதங்களை அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி முன்வைக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.