புனே:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 300 கோடி மதிப்புள்ள பிட்காயின் கிரிப்டோகரன்சியை அபகரிப்பதற்காக, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தரகரை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புனே போலீஸ் கூறியதாவது:-
புனே சைபர்கிரைமில் வேலை பார்த்துவந்த கான்ஸ்டபிள் திலிப் துக்ரம் காந்த்ரே என்பவருக்கு விஜய் நாயக் என்ற பங்குச்சந்தை தரகரிடம் ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் கிரிப்டோகரன்சி தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவரிடம் இருந்து பிட் காயினை அபகரிக்க அவர் தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.
கடந்த மாதம் 14-ம் தேதி விஜய் நாயக்கை ஹோட்டலில் இருந்து கடத்தி சென்றுள்ளார். இதை தொடர்ந்து கடத்தப்பட்டவரின் நண்பர் போலீசிடம் புகார் அளிக்க, 8 பேரும் சேர்ந்து கடத்தியவரை சாலையில் விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து விஜய் நாயக் கடத்தியவர்களை அடையாளம் காண்பிக்க அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.