இந்தியா

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை காப்பாற்றக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு!

கரப்பான் பூச்சி கட்சி ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகிறது.

நீட் வினாத்தாள் கசிவு, பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஜூன்.28ம் தேதிமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு, உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இதனால் அவருக்கு உடல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வாங்சுக் 8.5 கிலோ குறைந்துவிட்டதாகவும், இந்த உண்ணாவிரதத்தை அவர் நீட்டித்தால் இரண்டு நாட்களில் உயிரிழந்துவிடுவார் என எச்சரித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, வாங்சுக்கிற்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுமாறு மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ராகேஷ் குமார் சைனி இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் காலமானால், அது நாட்டிற்கும் உலகிற்கும் பெரும் அவமானமாக அமையும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசு வாங்சுக்கை ஒரு கொடூரக் குற்றவாளி, பயங்கரவாதி அல்லது தேசத்துரோகி போல நடத்துவதாகவும், அவர் மீது சிறிதும் அக்கறை காட்டவில்லை என்றும் அந்தப் பொதுநல மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கரப்பான்பூச்சி கட்சி ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகிறது.