கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி மக்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மக்களிடம் வேண்டுகோள் விடுத்து தனித்தனியே அந்தந்த மொழிகளில் அவர் எக்ஸ் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில், "2026 சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிப்பதில் மக்கள் பெருமளவில் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு கேரள மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
சாதனை அளவிலான வாக்குப்பதிவு, கேரளத்தின் ஜனநாயக உணர்வுக்குப் புத்துயிர் அளிக்கும். குறிப்பாக, மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும் முன்வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு நான் வலியுறுத்துகிறேன்.
புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து தங்கள் வாக்குகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக, நமது இளைஞர்களுக்கும், பெண் வாக்காளர்களுக்கும் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்துமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
2026 அசாம் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், அசாம் மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
அசாமை சேர்ந்த இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இதில் பங்கேற்று, இந்தத் தேர்தலை மக்களாட்சியின் மற்றும் குடிமைப் பொறுப்பின் ஒரு கொண்டாட்டமாக மாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்." என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.