மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது.
இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் மோடி பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.