இந்தியா

குடியரசுத் தலைவர் ஆட்சி.. மேற்கு வங்க நிர்வாகம் என் கையில் இல்லை - மம்தா

அதிகாரிகள் கைது செய்யப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. இது தொடர்பாக யாரும் எனக்கு தகவல் கூட அளிக்கவில்லை.

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி நேற்று வாக்காளர் பட்டியல் மறுஆய்விற்கு வந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை 9 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் சிறைபிடித்தனர்.

இரவு 1 மணியளவில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களைக் கலைத்து, நீதித்துறை அதிகாரிகளை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நீதித்துறை அதிகாரிகள் மீட்கப்பட்டபோது அவர்கள் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம் அதிகாரிகள் பாதுகாப்புக்கு மத்திய படையினரை நிலைநிறுத்த உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று சாகர்திகியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "அதிகாரிகள் கைது செய்யப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. இது தொடர்பாக யாரும் எனக்கு தகவல் கூட அளிக்கவில்லை.

நள்ளிரவில் ஒரு பத்திரிகையாளர் மூலமாகவே எனக்கு இது குறித்து தெரியவந்தது.

தற்போது நிர்வாகம் என் கையில் இல்லை. எனது அதிகாரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கைகளுக்குச் சென்றுவிட்டன.

தேர்தல் ஆணையமே சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்துகிறது. அவர்கள் அனைவரும் அமித் ஷாவின் பேச்சைக் கேட்டு நடக்கின்றனர்.

தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், தலைமை இயக்குநர், காவல் ஆணையர், மாவட்ட நீதிபதிகள், காவல் கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் உள்துறை அமைச்சரும் மறுபுறம் ஆளுநரும் வரவழைக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்துவிட்டு இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடத்த பாஜக முயற்சித்து வருகிறது.

மால்டாவில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டது பாஜகவின் சதியின் ஒரு பகுதி. அவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு தேவை குடியரசு தலைவர் ஆட்சியா, இல்லை திரிணாமுல் ஆட்சியா? மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.