இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகிற 26-ந்தேதி முதல் 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் செல்ல இருக்கிறார். இந்த பயணத்தின் போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி சார்ந்த விழாக்களில் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்த பயணத்தின் முக்கியமான நிகழ்வாக, 27-ந்தேதி சிக்கிம் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, படிப்பை முடித்த இளம் பட்டதாரிகளுக்கு பட்டங்களையும், தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவி, மாணவர்களுக்கு தங்க பதக்கங்களையும் நேரில் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.
சிக்கிம் மாநிலத் தலைநகரான கேங்டாக்கில் மேலும் 2 நாட்கள் அங்கேயே தங்கி அங்கு திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு அரசு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கிம் மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சரைச் சந்தித்து மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசவும், அங்குள்ள பழங்குடியின மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடவும் செல்கிறார்.
பாதுகாப்பு மற்றும் நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் ஒருவரின் வருகை என்பதால், சிக்கிம் மாநிலம் முழுவதும் தற்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.