இந்தியா

பவர் இல்லாத பவர் ஸ்டார் பவன் கல்யாண்- மந்திரி ரோஜா கடும் தாக்கு

பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

திருப்பதி:

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது,

தெலுங்கு தேசம் கட்சியில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் 24 இடங்களை நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.

பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.

ஆனால் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக வேண்டும் என பவன் கல்யாண் பேசுவது கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

இதனால் தான் அவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் சந்திரபாபு நாயுடுவை முன்னிலைப்படுத்த வந்துள்ளார். சந்திரபாபு நாயுடுவிடம் 25 சதவீத சீட் கூட பெற முடியாதவர் பவன் கல்யாண்.

40 ஆண்டுகால அனுபவம் உள்ளதாக கூறிக் கொள்ளும் சந்திரபாபு நாயுடு கூட்டணி இல்லாமல் களம் இறங்கினால் படுதோல்வி ஏற்படும் என மேலும் ஒரு கட்சியுடன் கூட்டணிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.