இந்தியா

1995-இல் சிறுவனை கடத்திக் கொன்ற வழக்கில் பிரபல யுடியூபர் கைது.. யார் இந்த Ex-muslim சலீம் வாஸ்திக்?

சலீம் வாஸ்திக் மீது நடந்த கொலை முயற்சியை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தபோதுதான் அவரைப் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது.

டெல்லியை சேர்ந்த பிரபல யூடியூபர் சலீம் வாஸ்திக், 31 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுவன் கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் காசியாபாத்தில் சலீம் வாஸ்திக் மீது ஒரு கொலை முயற்சி தாக்குதல் நடந்தது. அதன் பின்னணியை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தபோதுதான் அவரைப் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது.

இவரது கைரேகைகளை பழைய குற்றப் பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவர் தேடப்பட்டு வந்த ஆயுள் தண்டனை கைதி என்பது தெரியவந்துள்ளது.

1995ல் டெல்லியில் சந்தீப் பன்சால் என்ற 13 வயது சிறுவனை கடத்தி, ரூ.30,000 பணம் கேட்டு, பின்னர் அந்தச் சிறுவனைக் கொலை செய்த வழக்கில் 1997ல் நீதிமன்றம் சலீம் வாஸ்திக்-கிற்கு ஆயுள் தண்டனை விதித்தது.

2000 ஆம் ஆண்டில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்த இவர், அதன் பிறகு தலைமறைவானார்.

பல ஆண்டுகளாக ஹரியானா மற்றும் காசியாபாத் பகுதிகளில் தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு துணி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

தன்னை 'எக்ஸ்-முஸ்லிம்' என்று அடையாளப்படுத்திக் கொண்ட இவர் சலீம் கான் என்ற தனது பெயரை 'சலீம் வாஸ்திக்' என மாற்றி யூடியூபில் மத ரீதியான விவாதங்களைச் செய்து சமூக வலைதளங்களில் பிரபலமானார்.