கேரளம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பிரசாரம் வருகிற 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளம் மாநிலத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் பா.ஜ.க. 98 தொகுதிகளிலும், காங்கிரஸ் 92 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 76 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகளில் அவற்றின் கூட்டணி கட்சிகள் களம் காணுகின்றன.
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கடந்த மாதம் 29-ம் தேதி பாலக்காடு மற்றும் திருச்சூரில் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி இரண்டாம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட மீண்டும் இன்று கேரளம் வந்தார். பிற்பகல் 3 மணியளவில் சங்கனாச்சேரி வந்த அவர் அங்கிருந்து கார் மூலம் திருவல்லா சென்றார். அங்குள்ள பொது ஸ்டேடியத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில், திருவல்லாவில் பிரசாரத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் சென்றார். அங்கு கிள்ளிப்பால் சந்திப்பு முதல் கரமனை வரையிலான ஒன்றரை கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தினார். அதில் பிரதமருடன் நேமம் தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. கட்சியின் மாநில தலைவருமான ராஜீவ் சந்திரசேகர், பா.ஜ.க. வேட்பாளர்கள் ஸ்ரீலேகா, முரளீதரன், கரமனை ஜெயன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக கேரளம் வந்ததால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.