இந்தியா

Kerala Assembly Election | கேரளத்துக்கு பிரதமர் மோடி 4-ந்தேதி மீண்டும் வருகை

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக கேரளம் வருகிறார்.

திருவனந்தபுரம்:

கேரளம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால், தேர்தலில் களம் காணும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்டைகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றன.

மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் பா.ஜ.க. 98 தொகுதிகளிலும், காங்கிரஸ் 92 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 76 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளை களமிறக்கி உள்ளன.

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கடந்தமாதம் 29-ந்தேதி பிரசாரம் செய்தார். அன்றைய தினம் அவர் பாலக்காட்டில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் திருச்சூரில் நடந்த சாலை பேரணியில் பங்கேற்று ஆதரவு திரட்டினார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகிற 4-ந்தேதி மீண்டும் கேரளம் மாநிலத்துக்கு வருகிறார். அவர் அன்றைய தினம் முதலில் திருவனந்தபுரத்தில் சாலைப்பேரணியில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் அந்த சாலைப்பேரணி திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் நேமம் தொகுதிகளின் வழியாக கில்லிப்பாலத்தில் இருந்து கரமனை வரை 1.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெறுகிறது.

அதன்பிறகு திருவவ்லாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அந்த கூட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர். பொதுக்கூட்டத்தில் 30 ஆயிரம் பேர் வரை திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக கேரளம் வருகிறார். இதனால் அம்மாநில பா.ஜ.க. கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.