இந்தியா

வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எண்ணம் இல்லை - பிரதமர் மோடி

வெளிநாட்டுப் பயணத்தின் மீது அத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பதன் மூலமும் பெட்ரோல்-டீசல் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி, அல்லது கூடுதல் கட்டணம் விதிப்பதற்கான ஒரு திட்டத்தை அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இதை பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

மக்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு வரி விதிக்க போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. இதில் துளியளவும் உண்மையில்லை. வெளிநாட்டுப் பயணத்தின் மீது அத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் மக்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் வாழ்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.