இந்தியா

வேலைக்காக வெளிமாநிலம் செல்லும் நிலை தற்போது மாறியுள்ளது: பீகாரில் பிரதமர் பேச்சு

பீகாரில் பிரதமர் மோடி ரூ.21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது என்றார்.

பாட்னா:

பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதில் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் பீகாரில் வாரிசு அரசியல் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் பீகார் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் பீகார் மாறியுள்ளது.

சமீபத்தில் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இது ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கே கிடைத்த கவுரவம்.

பீகாரில் ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது. ஏழைகள் முன்னேறும் போது தான், மாநிலம் வளர்ச்சி அடையும்.

இங்கிருந்து வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு மக்கள் செல்லும் நிலை இருந்தது. அந்த நிலை மாறி உள்ளது. அது மீண்டும் வந்துவிடக் கூடாது.

வாரிசு அரசியலில் ஈடுபட்டு வருபவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வர முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT