இந்தியா

ககன்யான் திட்டத்தில் பயன்படும் கருவிகள் இந்தியாவில் தயாரானவை: பிரதமர் மோடி பெருமிதம்

ககன்யான் திட்ட வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.இந்தியாவின் விண்வெளித்துறை வளர்வதோடு பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

திருவனந்தபுரம்:

ககன்யான் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கேரளா வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் ஆய்வு மையத்தில் ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். ஆளுநர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இருந்தனர்.

இதையடுத்து, ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

நிலவில் சந்திரயான் தரையிறங்கிய சிவசக்தி பாய்ண்ட் இந்தியாவின் திறமைகளை உலகிற்கு பறைசாற்றுகிறது. விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்கள் தனிநபர்கள் அல்ல. 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை விண்வெளிக்கு கொண்டு செல்பவர்கள். அவர்கள் இந்தியாவின் நம்பிக்கை, பலம் மற்றும் பெருமை. அவர்கள் 4 பேருக்கும் தேசத்தின் ஆசீர்வாதம் துணை இருக்கும்.

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் வீரர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டுங்கள். விண்வெளி வீரர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விண்வெளி வீரர்களின் கடும் பயிற்சியில் யோவாவும் முக்கிய பங்காற்ற உள்ளது. ஒரே எண்ணத்துடன் தவம்போல் பயிற்சி செய்ய உள்ள விண்வெளி வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.

இந்தியாவின் விண்வெளித்துறை வளர்வதோடு பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ககன்யான் திட்டத்தில் பயன்படும் கருவிகள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரானவை என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT