இந்தியா

வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியை இந்தியர்களுக்கு வழங்கியது.

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கம் 1942-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமான ஆகஸ்ட் புரட்சி என அழைக்கப்படும் இந்தப் போராட்டம் மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினையடுத்து 1942, ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டது.

வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்

இதில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு போராட்ட தினத்தில் பங்கேற்றவர்கள் குறித்து பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

வரலாற்றுச் சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும் ஓர் உத்வேகமாகத் திகழும்.

மகாத்மா காந்தியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, 'வெள்ளையனே வெளியேறு' என்ற அந்த முழக்கம் நமது விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியது.

அத்துடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் அது வெளிப்படுத்தியது' என பதிவிட்டுள்ளார்.

செய் அல்லது செத்து மடி

இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று அத்தியாயமாகும், இது நாட்டு மக்களை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியையும், துணிவையும் அவர்களுக்கு வழங்கியது. தேசத்தின் விடுதலைக்காக இந்த மாபெரும் போராட்டத்தில் அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திரப் போராளிகள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்