லக்னோ:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ள நிலையில், 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக களம் இறங்குகிறார். அவர் வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று மாலை பிரதமர் மோடி உத்தர பிரதேசம் சென்றுள்ளார். அங்கு வாரணாசி நகரில் பிரதமர் மோடி நேற்று வாகன பேரணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், வாரணாசியின் கங்கை கரையில் உள்ள தசஅஸ்வமேத காட் என்ற இடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார்.
வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று பிற்பகலில் பிரதமர் மோடி தாக்கல் செய்ய உள்ளார்.