அசாதுதின் ஓவைசி, பிரதமர் மோடி 
இந்தியா

பிரதமர் மோடி உண்மையை கேட்க விரும்பவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது: அசாதுதின் ஓவைசி

பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரிடம் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியது தொடர்பாக மேகாலயா கவர்னர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பிரதமர் மோடியிடம விவசாயிகள் குறித்து பேசினேன். அப்போது ஆணவத்துடன் நடந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி மீது கவர்னர் ஒருவர் விமர்சனம் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் இந்த விசயத்தை எப்படியும் கையில் எடுத்துக்கொள்ளும்.

இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில் ‘‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, 500 பேர் உயிரிழந்தது குறித்து மேகாலயா ஆளுநர் பேசும்போது,  பிரதமர் மோடி கோபம் அடைந்துள்ளார். மக்களை தவிர்த்து, கவர்னரிடம் இருந்து கூட உண்மை கேட்க  பிரதமர் மோடி விரும்பவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அவர் பாராட்டுக்களை மட்டுமே விரும்புகிறார்’’ என விமர்சனம் செய்துள்ளார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்

பிரதமர் மோடியை நான் சமீபத்தில் சந்தித்தேன். 5 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினேன். அவரிடம் விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட்டனர் என்றேன்.

அதற்கு அவர் மிகுந்த ஆணவத்துடன் ‘அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்’ என்று கேட்டார்.

நான் அவரிடம் ஆமாம். நீங்கள் மன்னராக இருப்பதால் உங்களிடம் தெரிவித்தேன். அவருடன் நான் வாக்குவாதம் செய்தேன். அவர் உடனே நீங்கள் அமித் ஷாவை பாருங்கள் என்றார். நானும் அமித் ஷாவை பார்த்தேன். அமித் ஷாவோ ஒரு நாய் இறந்தாலும் கூட பிரதமர் இரங்கல் கடிதத்தை அனுப்புகிறார் என்று கூறினார்.

மேகாலயா கவர்னரின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சனங்களை முன்வைத்தது. பிரதமரின் தற்பெருமை, கொடூர சிந்தனை மற்றும் உணர்வற்ற போக்கை இது காட்டுவதாக காங்கிரஸ் சாடியுள்ளது. மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் பேச்சு அடங்கிய வீடியோவை காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சத்யபால் மாலிக் காஷ்மீர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். பின்னர் கோவாவுக்கு மாற்றப்பட்டார். தற்போது மேகாலயா கவர்னராக இருக்கிறார்.