புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சியின் தலைவருமான சரத் யாதவ் (75), நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய மந்திரியாக இருந்தார். 2017ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவால் அரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.
சரத் யாதவ் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியி, சரத் யாதவ்ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில், எம்.பி., மற்றும் மந்திரி என தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எங்களின் தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி" என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.