பாட்னா:
பழங்குடியின தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. பிர்சா முண்டா பிறந்த தினத்தை பழங்குடியினரின் பெருமித தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பீகார் மாநிலம் ஜமுய் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு அவரை பழங்குடியின மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களின் இசை வாத்தியத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த பிரதமர் மோடி, அதை வாங்கி தானும் இசைத்து மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த கண்காட்சியில், பழங்குடியின மக்களின் பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அங்கு அரியலூரைச் சேர்ந்த தர்மதுரை, எழிலரசி தம்பதியினர் கடை ஒன்றை அமைத்திருந்தனர். பிரதமர் மோடி அங்கு வந்தபோது, தமிழக பழங்குடியின தம்பதியினர் தாங்கள் காட்சிக்கு வைத்திருந்த பொருட்களை பற்றி கூறினர்.
அதன்பின் அவருடன் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி அவர்களுடன் ஒரு செல்பி போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.