இந்தியா

"பெருமைக்குரிய உணர்வு..!" போர் விமான பயண அனுபவம் குறித்து பிரதமர் மோடி டுவீட்

முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.

போர் விமான பயணித்திற்கு பிறகு பிரதமர் மோடி தனது அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

தேஜஸ் போர் விமானத்தில் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது. நமது நாட்டின் உள்நாட்டுத் திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும், நமது தேசிய திறன் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT