உச்சநீதிமன்றம்
இந்தியா

தலைமை நீதிபதி குறித்து அவதூறு, பேப்பரை கிழித்து வீசிய மனுதாரர்: உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு

உச்சநீதிமன்றம் வழக்கறிஞராக ஆஜராக மனுதாரர், திடீரென நீதிபதிகளை நோக்கி பேப்பரை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் இன்று பிரபால் பிரதாப் என்பவர், கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலேக் அராதே ஆகிய நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன், நான்தான் மனுதாரர். நானே வாதாட போகிறேன் என்று ஆஜரானார்.

நீதிபதிகள் நீதித்துறை ஊழியர்கள்

உடனே, நான் இறையாண்மையாளர். இங்குள்ள நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் என்றார். அத்துடன், மிஸ்டர் நீதித்துறை ஊழியர்களே, லக்னோவில் சைபர் கிரைமில் ஒரு கும்பலை நடத்தி வரும் ஏ.எஸ்.பி.-க்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடமாறு நாங்கள் உங்களுக்கு உத்தரவிடுகிறேன் என்றார்.

இதனால் நீதிபதி கே.வி. விஸ்வநான் திகைத்து போனார். அவரால் இதை நம்பமுடியவில்லை. உடனே, நீங்கள் எனக்கு உத்தரவிடுகிறீர்களா?. எங்களுக்கு உத்தரவிடுகிறீர்களா?. என்று கேள்வி எழுப்பினார். உடனே, பிரபால் பிரதாப் தலைமை நீதிபதி குறித்து தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார். அத்துடன் பேப்பரை கிழித்து எறிந்தார். இதனால் விசாரணை பாதிக்கப்பட்டது.

விசாரணை அறையில் இருந்து வெளியேற்றம்

நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தலைமையிட்டு, அவரை நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற்றினர். பின்னர் சிறிது நேரம் நீதிமன்றத்தில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார்.

இந்த இடையூறுக்குப் பிறகு இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அவர் மீது தொடக்க அவமதிப்பு நடவடிக்கை அல்லது எந்தவொரு நடவடிக்கையும் அவருக்கு எதிராக எடுக்க முடிவு செய்யவில்லை என்று அறிவித்தனர்.

நீதிபதி விஸ்வநாதன் "நாங்கள் அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க பரிந்துரைக்கவில்லை. வழக்கின் தகுதி மற்றும் தன்மையைப் பொறுத்தவரை, நாங்கள் ஆவணங்களைப் பரிசீலித்தோம். கேள்விக்குரிய உத்தரவில் தலையிடுவதற்குப் போதுமான காரணங்கள் ஏதுமில்லை எனக் கருதுகிறோம். எனவே, சிறப்பு அனுமதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்றார்.