சென்னை:
கடந்த 2007-ம் ஆண்டு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து அந்த உத்தரவானது தற்போது வரையில் நடைமுறையிலும் உள்ளது.
இந்த நிலையில் இந்த 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் பாஸ்கரன் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், இதேப்போன்ற அரசாணை ஆந்திர மாநிலத்திலும் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு எதிராக மேல்முறையீட்டு மனுவானது சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த மனு மீது எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்திருந்தது.
இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டாலின் பாஸ்கரன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அதில், கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் இந்துக்கள் 88 சதவீதம் என்றும், கிறிஸ்தவர்கள் 7 சதவீதம் என்றும், முஸ்லிம்கள் 6 சதவீதம் என்றும் புள்ளி விவரங்கள் உள்ளன.
இருப்பினும் சிறுபான்மையின கிறிஸ்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முஸ்லிம் ஆகியோர்களுக்கு 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால், பிறர் பாதிப்படைகின்றனர். எனவே அதுசார்ந்த அரசாணையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவானது சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.