இந்தியா

Ambulance | கணவன் உயிர் போகும் நேரத்தில்… மனைவியை ஆம்புலன்ஸ் சுத்தம் செய்ய வைத்த மருத்துவர்!

கட்னி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வந்த இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மத்திய பிரதேச மாநிலத்தின் கட்னி மாவட்டத்தில், காயமடைந்த நோயாளியின் மனைவி '108' ஆம்புலன்ஸ்-ஐ சுத்தம் செய்ய வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

அந்த வீடியோ வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நிர்வாக நடவடிக்கையை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் பைலட் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (EMT) ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரேலா கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்த ராகுல் பர்மனை, '108' ஆம்புலன்ஸ் மூலம் கட்னி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வந்த இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கட்னி தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி ராஜ் சிங் தாக்கூர் கூற்றுப்படி, காயமடைந்த நோயாளியின் இரத்தம் வாகனத்தில் படிந்திருந்தது. பணியில் இருந்த அவசர மருத்துவ உதவியாளர் மோஹித் கத்திக், நோயாளியின் மனைவி பிரமீலா பர்மனை ஆம்புலன்ஸை சுத்தம் செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் அந்த வாகனத்தைக் கழுவ வைக்கப்பட்டார். இந்த செயல் ஏற்கனவே அமலில் உள்ள நெறிமுறைகளை மீறுவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என தாக்கூர் கூறினார்.

இந்த சம்பவத்தின் வீடியோ பரவலான கவனத்தை ஈர்த்தது. மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் திவாரி இவ்விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

விசாரணையை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை இயக்கி வரும் ஜே.ஏ.இ.எஸ். ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பைலட் தேவா சாஹு மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் மோஹித் கத்திக் ஆகிய இருவரையும் பணிநீக்கம் செய்தது.