இந்தியா

பீகாரில் பயணிகள் ரெயிலில் தீப்பிடித்தால் பரபரப்பு

பீகாரின் சசாரம் ரெயில் நிலையத்தில், பாட்னா நோக்கிச் செல்ல இருந்த பயணிகள் ரெயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

சசாரம் ரெயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்தில் சசாரம்- பாட்னா செல்லும் விரைவு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரெயில் இன்று காலை 6 மணிக்கு புறப்படக் கூடியது.

ரெயில் புறப்படுவதற்கு சற்று முன் இந்த ரெயிலின் பெட்டி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் மளமளவென மற்ற பெட்டிகளுக்கும் தீ பர ஆரம்பித்தது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்த உடனேயே தீயணைப்புப் படையினரும் ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புப் பணிகளைத் தொடங்கினர்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குள் ரெயிலின் ஒரு பெட்டி முற்றிலுமாக எரிந்து சேதமானது.

மேலும் சேதத்தை மதிப்பிடுவதற்கும், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் ரெயில்வே நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரெயில் புறப்படுவதற்கு முன் தீ விபத்து ஏற்பட்டதாலும், பயணிகள் யாரும் பெட்டியில் ஏறாததாலும் பெரிய அசம்பாவிதம் ஏற்படவில்லை.