நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. இன்றைய நாளில் தொடங்கிய இரு அவைகளும் சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த மாணவர்கள் மீது தாக்குதல், அயோத்தி ராமர் கோவில் வன்கொடுமை திருட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுப்பட்டதால் இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் பாதித்தன.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் பேசுகையில், மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது மிகவும் தீவிரமான விஷயம் என்பதால் விதி 267-ஐ பயன்படுத்தி அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பிக்கள், நீட் பிரச்சனை, மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து விவாதத்தை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையிலும் நீட் பிரச்சனை, மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷம் எழுப்பியதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக நீட் தேர்வை தடை செய்வது குறித்தும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் விவாதிக்க மக்களவை திமுக குழு தலைவர் டிஆர்பாலுவும், மாநிலங்களவை திமுக எம்.பி திருச்சி சிவாவும் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிஜேபி தலைமையில் இளைஞர்களின் 1 மதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து அண்மையில் பிரதமர் மோடி மௌனம் களைத்து, இந்த மசோதா குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
இளைஞர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார். அவரை என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து, சால்வை அணிவித்து வரவேற்று ஆறுதல்படுத்தினர்.
இதனிடையே, ஜூலை 20 அன்று இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.