இந்தியா

சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.... காங்கிரஸ் அல்லாத புதிய மெகா கூட்டணி? - அபிஜீத் பேச்சின் பின்னணி என்ன?

அபிஜீத் தீப்கே குறிப்பிட்ட மூன்று முதலமைச்சர்களுக்கும் தற்போது பதவியில் இல்லை.

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் என மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் மாநில அளவில் நல்லாட்சி செய்த தலைவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பினராயி விஜயனின் தலைமையில், கேரளா கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சிறப்பான மற்றும் முன்மாதிரியான பணிகளை வெளிப்படுத்தியுள்ளது;

மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மிகச் சிறப்பாக மேம்படுத்தியுள்ளார்; டெல்லியில் பள்ளிகள் மற்றும் சுகாதாரத் துறையின் மேம்பாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார் என மூன்று தலைவர்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உருவாகும் 3வது கூட்டணி?

2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உருவான நிலையில், அதற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவானது.

திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இதில் அங்கம் வகித்தன.

ஆனால் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற பெரும் கேள்வி அப்போது எழுந்தது. காரணம் கூட்டணி உருவான சமயத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற பேச்சுகள் இந்திய அளவில் அடிப்பட்டன.

இதுதொடர்பான கேள்வி மு.க.ஸ்டாலினிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், என் தகுதி எனக்குத் தெரியும் என பதிலளித்தார். இதனிடையே ஆம் ஆத்மி, திரிணாமுல் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி தனித்து களம் கண்டன.

இந்நிலையில் அபிஜீத் தீப்கேவின் இந்தக் கருத்தை தொடர்ந்து காங்கிரஸ் அல்லாத இந்த முக்கிய கட்சிகளை வைத்து ஒரு புதிய கூட்டணி உருவாக உள்ளதா? என்ற கேள்விகள் இணையத்தில் உலா வருகின்றன.

இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாத நிலை

ஆனால் அபிஜீத் தீப்கே குறிப்பிட்ட மூன்று முக்கியத் தலைவர்களுமே தற்போது ஆட்சியில் இல்லை. 2026-ல் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் கேரளாவில் கம்யூனிஸ்டும், தமிழ்நாட்டில் திமுகவும் ஆட்சியை இழந்தன. கடந்தாண்டு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது.

மூன்று தலைவர்களுமே தங்கள் ஆட்சிகளில் கொண்டுவந்த திட்டங்கள் மக்களுக்கு பெரும் பலனை தரவல்லதாக இருந்தாலும், சில அரசியல் காரணங்களாலும், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் செய்தவற்றை கவனிக்க தவறியதாலும் ஆட்சியை இழந்ததாக ஒரு முக்கிய கருத்து முன்வைக்கப்படுகிறது.