கட்சித் தாவல்
கடந்த சில ஆண்டாகவே மோடிக்கு எதிராகப் பேச அச்சப்படுவதாக கூறி ஆம் ஆத்மி மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா அண்மையில் நீக்கப்பட்டார்.
இந்த சூழலில் ராகவ் சத்தா தன்னை பாஜகவில் இணைத்துகொள்வதாக இன்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில்அறிவித்தார்.
தங்கள் பதவியை ராஜினாமா செய்த மேலும் 6 ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பிக்கள் தன்னுடன் பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக அவர் அறிவித்தார்.
ராகவ் சத்தாவை, சந்தீப் பதாக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி, சுவாதி மலிவால் மற்றும் அசோக் மிட்டல் ஆகிய 7 எம்.பிக்களும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதனால் மாநிலங்களவையில், பாஜக கூட்டணியின் பலம் 147 ஆக உயர உள்ளது.
ஆபரேஷன் லோட்டஸ்
ராகவ் சத்தாவின் இந்த அறிவிப்பு ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வரை அனைவரும், இந்த முழு விவகாரத்திற்கும் பின்னணியில் பாஜக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
கெஜ்ரிவால் ஒரே வரியில், "பாஜக மீண்டும் ஒருமுறை பஞ்சாபியர்களின் முதுகில் குத்தியுள்ளது" என்று கடுமையாகக் சாடியுள்ளார்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், அமித் ஷா தலைமையிலான பாஜக, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு 'ஆபரேஷன் லோட்டஸ்' திட்டத்தை செயல்படுத்தியதாக தெரிவித்துள்ளார் .
கட்சி மாறிய எம்.பி.க்களை 'துரோகிகள்' என்று அழைத்த சஞ்சய் சிங், "ஆம் ஆத்மி கட்சிக்கும் பஞ்சாப் மக்களுக்கும் எப்போதெல்லாம் துரோகம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் மக்கள் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்தத் துரோகத்திற்கும் வஞ்சகத்திற்கும் பஞ்சாப் மக்களும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று சஞ்சய் சிங் சாடியுள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசுகையில், ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாகவும், பஞ்சாப் மக்களுக்கு எம்.பி.க்கள் துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பஞ்சாப் மக்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் இருக்கிறார்கள், தொடர்ந்து கட்சியுடன் அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். கட்சி என்பது ஒரு தனிநபரை விடப் பெரியது, வெளியேறிய 6-7 பேர் மட்டுமே பஞ்சாப் ஆகிவிடமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.