இந்தியா

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜக-விடம் பணம் மட்டுமே மிச்சம் உள்ளது: அகிலேஷ் யாதவ்

பாஜகவின் ஊழல் நிறைந்த அரசு கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்குச் சொந்தமான 5 லட்சம் ரூபாயை விழுங்கிவிட்டது.

உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பெண்களுக்கு ரூ. 20,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படலாம் என்று செய்தி வெளியான நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சியிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தேர்தல் வாக்குறுதியாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெண்களுக்கு பாஜக ஊக்கத்தொகையாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது.

அகிலேஷ் யாதவ் பதிவு

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜக-விடம் பணத்தை தவிர வேறு எதுவும் மிச்சமில்லை.

அதுவும் பாஜக முறைகேடாக சம்பாதித்த பணம் தான்; அந்த பணத்தை உத்தரப் பிரதேசத்தின் மதப்பற்றுள்ள பெண்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பெண்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவித்து தேர்தலில் வெற்றி பெற்ற மற்ற மாநிலங்களில், ஒருபுறம் அதை கொடுக்க தயங்கும் அதே வேளையில், மறுபுறம் பாஜக கொடுத்த பணத்தை மக்களிடம் திரும்ப கேட்கிறார்கள்.

அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாத பெண்களுக்கு எதிராக, பாஜக காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் வழக்குகள் போன்ற கண்டிக்கத்தக்க வழிகளை கையாள்கிறது என்று உத்தரப் பிரதேசத்தின் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்று பாஜக அரசு ஆண்டுக்கு ரூ.50,000 வழங்குவது பற்றி பேசுகிறது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளிலேயே இந்த பணத்தை அவர்களால் கொடுத்திருக்க முடியும், இருந்தும் அவர்கள் அதை கொடுக்கவில்லை.

பாஜகவின் ஊழல் நிறைந்த அரசு கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்குச் சொந்தமான 5 லட்சம் ரூபாயை விழுங்கிவிட்டது. இப்போது வெறும் 20,000 ரூபாய் மட்டுமே தருவதாக வெற்றுப் பேச்சு பேசுகிறது.

5 லட்சம் ரூபாயில் 20,000 ரூபாய் என்பது வெறும் நான்கு சதவீதம் மட்டுமே. அதாவது, இந்த பாஜகவினர் பெண்களின் பங்கில் 96 சதவீதத்தை விழுங்கிவிட்டனர்.

கோயிலில் நடந்த திருட்டு மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, பாஜகவிடம் அறநெறியும் இல்லை, தைரியமும் இல்லை.

பாஜக தனது திட்டங்களின் கீழ் தகுதியுள்ளவர்களுக்கு பலன்களை வழங்கும்போதெல்லாம், அந்தப் பணம் அதற்கு உரிமையுள்ளவர்களை சென்றடைவதுதான் முக்கியமான விஷயம்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.