பெங்களூரு:
கர்நாடகாவில் வீட்டிற்குள் புகுந்து விளையாடிக்கொண்டிருந்த 2 குழந்தைகளை மர்மநபர்கள் கடத்திச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்க்கும் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் இரண்டு பேர் வீட்டிற்குள் ஓடிச்சென்று 3 மற்றும் 4 வயதுடைய குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு ஓடுகின்றனர். அப்போது அவர்களுக்காக காத்திருந்த காரில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று விடுகின்றனர்.
முன்னதாக, குழந்தைகள் கடத்துவதற்கு திட்டமிட்ட 2 பேரும் குழந்தைகள் மழலையர் பள்ளியில் இருந்து வரும்வரை காத்திருந்து தங்களது திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.
குழந்தைகளின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் தொழில் போட்டி காரணமாக குழந்தைகள் கடத்தப்பட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.