ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 2-வது அலையை உருவாக்கிய டெல்டா வைரஸை விட மிகவும் வேகமாக பரவும் தன்மையுடையதாக ஒமைக்ரான் உள்ளது.
இதனால் 3-வது அலை உருவாகும் நிலை ஏற்பட்டது. இந்தியாவில் தினசரி பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஒமைக்ரான் வேகமாக பரவினாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு அதிக அளவில் இருக்காது எனக் கூறப்படுகிறது. டெல்டா வைரஸ் தொற்றின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்பட்டது. தற்போது அதுபோன்ற நிலை ஏற்படாது. பாதிப்புக்குள்ளானவர்கள் குறுகிய நாட்களில் குணமடைந்து வருகிறார்கள்.
ஒமைக்ரானால் உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில் பாதுகாக்க ஒவ்வொரு நாடுகளும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. அதேபோல் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி வருகிறது.
இந்தியாவில் வருகிற 10-ந்தேதியில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்றைய தினத்தில் இருந்து சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் ‘‘ஒமைக்ரான் வேகமாக பரவக்கூடியது. ஆனால், அது லேசான நோயைத்தான் ஏற்படுத்துகிறது. வைரஸ் பலவீனமாகியுள்ளது. மிகவும் லேசானா நோய் வைரஸ் காய்ச்சல் போன்றது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையானது. எனினும், பயப்பட தேவையில்லை.
மார்ச்- ஏப்ரல் மாதங்களில் டெல்டா வைரஸ் பரவலாக பரவும்போது, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய 15 முதல் 25 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் 4 முதல் 5 நாட்களில் குணமடைகின்றனர்’’ என்றார்.
இதையும் படியுங்கள்... 33 லட்சம் சிறுவர்களுக்கும் ஒரு மாதத்தில் தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்