இந்தியா

இரங்கல் செய்தியில் பதிவிட்ட ஒரு வார்த்தை: பேடிஎம் சிஇஓவுக்கு குவிந்த கண்டனங்கள்

தனது இரங்கல் செய்தியின் இறுதியில் ஓகே, டாடா பை பை என பதிவிட்டிருந்தார்.இவரது பதிவைக் கண்ட நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார்.

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அடுத்த தலைமுறையின் தொழில் முனைவோர் இந்தியாவின் மிகவும் எளிமையான தொழிலதிபருடன் தொடர்பு கொள்வதைத் தவறவிடுவார்கள். வணக்கங்கள், ஐயா. ஓகே, டாடா பை பை என பதிவிட்டிருந்தார்.

இவரது பதிவைக் கண்ட நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். செய்திகளில் இருப்பதற்கான வாய்ப்பை ஒருபோதும் தவறவிடாதீர்கள் என ஒருவரும், இது பொருத்தமற்றது என மற்றொருவரும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா சர்ச்சையை ஏற்படுத்திய பதிவை நீக்கினார்.