இந்தியா

நவீன் பட்நாயக்குடன் மோகன் மாஜி சந்திப்பு: பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு

மோகன் சரண் மாஜி 4 முறை ஒடிசா சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.துணை முதல் மந்திரிகளாக கே.வி.சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புவனேஸ்வர்:

பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே களம் கண்டன.

இதில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 78 தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை அக்கட்சி பெற்றது. ஒடிசாவில் பா.ஜ.க. முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

இதற்கிடையே, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒடிசாவின் புதிய முதல் மந்திரியாக மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மோகன் சரண் மாஜி, 4 முறை ஒடிசா சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சட்டசபையில் கட்சியின் தலைமை கொறடாவாக இவர் செயல்பட்டுள்ளார். துணை முதல் மந்திரிகளாக கே.வி.சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் முதல் மந்திரியாக மோகன் சரண் மாஜி இன்று மாலை பதவியேகிறார்.

இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை மோகன் மாஜி சந்தித்தார். அப்போது, பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.