இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது சுயேட்சையாக போட்டியிட்ட 3 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகினர்.
சமீபத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த நிலையில் மூன்று பேரும் பாஜக கட்சியில் இணைந்தனர்.
இதனால் மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 10-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இரண்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.
இந்த மூன்று இடங்களிலும் பாஜக அதே நபர்களை களம் இறக்கியது. அவர்களில் ஒருவர் மட்டும்தான் வெற்றி பெற்றார். இதன்மூலம் இமாச்சல பிரதேச தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக சுயேட்சை எம்.எல்.ஏ. இல்லாத சட்டமன்றம் ஆகியுள்ளது.
தெக்ரா தொகுதியில் முதல்வர் சுகுவின் மனைவி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.