இந்தியா

ஓய்வின்போது இனிமேல் வெள்ளி பதக்கம் வழங்கப்படாது: ரெயில்வே அமைச்சகம்

வெள்ளி விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் நிறுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருத்து.போலியான அல்லது தரம் குறைந்த வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டதாக சில புகார்கள் உள்ளன.

மாலை மலர்

ரெயில்வே துறையில் வேலைப்பார்க்கும் அதிகாரிகள் ஓய்வு பெறும்போது, தங்க முலாம் பூசிய வெள்ளிப் பதக்கம் வழங்குவது நடைமுறையாக உள்ளது. இந்த நிலையில் இனிமேல் இந்த பதக்கம் வழங்கப்படாது என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் அனைத்து மண்டல ரெயில்வேயிக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

சுற்றிக்கையில் "தற்போதுள்ள பதக்கம் வழங்கும் நடைமுறை இத்துடன் நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே, கொள்முதல் செய்யப்பட்டிருக்கும் வெள்ளி பதக்கங்கள் பயனுள்ள மற்ற செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கொண்டு எந்த காரணமும் குறிப்பிடப்படவில்லை. தற்போது வெள்ளி விலை அதிகரித்துள்ளதால் செலவினத்தை கட்டுப்படுத்தவும், தரமற்ற வெள்ளி பதக்கம் ஒப்பந்ததாரர்களால் வழங்கப்படுவதாலும் நிறுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக தரம் குறைந்த மற்றும் போலியாக வெள்ளி வழங்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. இது கூட முக்கிய காரணமாக இருக்கலாம் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.