பசுமை மற்றும் தூய்மைப் போக்குவரத்து குறித்து டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் சிறப்புரையாற்றிய மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி, தனிப்பட்ட வாகன பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.
பொதுத்துறை மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில் மின்சார வாகன பொதுப் போக்குவரத்து அமைப்பை, தொழில்ரீதியாக செயல்படுத்தினால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது போன்று லண்டனில் செயல்படும் போக்குவரத்து முறைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
மக்கள் குறைவான கட்டணத்தில் அதிக வசதியான பயணத்தை விரும்புவதாக அவர் கூறினார். போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி செய்யவும், பயணத்தை எளிதாக்கவும், கைகளால் பயணச்சீட்டு தரும் முறைக்கு பதிலாக, அட்டை அல்லது க்யூஆர் குறியீடு முறையிலான பயணச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், காற்று மாசு குறைவதுடன், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்றும் அவர் தெரிவித்தார். 15 லட்சம் கோடியில் ஆட்டோமொபைல் துறையை உருவாக்க அரசு முயற்சித்து வருவதாகவும், இது 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மந்திரி நிதின் கட்கரி கூறினார்.
பொருளாதார நம்பகத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மாற்று எரிபொருள் மற்றும் போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.